வளைகுடா போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமெனவும் குறிப்பாக, இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் விநியோகச் சங்கிலியின் தடங்கலால் கடல் மார்க்க வர்த்தகக் கட்டணம் பெருமளவில் அதிகரிக்குமென கடல் போக்குவரத்து கொழும்பு பயிற்சி நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மாசகொரல்ல தெரிவித்தார்.

இந்நிலைமை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிரொலிக்கும். இக்காலாண்டில் பொருட்களுக்கான சந்தைத் தட்டுப்பாடு ஏற்படும். பல பொருட்கள் விலை அதிகரிப்பை தற்போதே காண்பித்துள்ளன. யுத்தம் நீடித்தால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி உட்கட்டமைப்பு வசதி சீரழிவை ஏற்படுத்தும்.

யுத்தம் நிலவும் பிரச்சினைக்குரிய கடல் மார்க்கத்தில் ஏற்கனவே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் சந்தை விலை அதிகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது இடம்பெற்று வரும் மத்திய கிழக்கில் போர் முடிவுறுத்தப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லையென முன்னாள் இஸ்ரேல் தூதுவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சரத் விஜேசிங்க தெரிவித்தார். எண்ணெய் வளமிக்க 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல் இடம்பெற்று வருகிறது. இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது இந்த மத்திய கிழக்கு யுத்தம் பாரிய நேரடி மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *