நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ பணிக்கமர்த்தப்படுபவர்களே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வீட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபர தரவு போன்றவற்றை பெறறுக்கொள்ளுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

