இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்தத் தகவலை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இன்று சபையில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி ஜனாதிபதியின் உரையின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் சமூகமளித்திருந்தால், அவர்களுடன் நேரடி கலந்துரையாடலை முன்னெடுக்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி மட்டத்தில் தமது கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சபையில் நிகழ்த்தும் இந்த உரை அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு நேரடியாகச் செவிசாய்க்க அரசு முன்வந்துள்ளமை ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது

