எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது.
விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல.
எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள், இவற்றைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை.
100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், விலை சூத்திரத்தின்படி வரவேண்டிய விலையை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கருதியிருக்கலாம்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி விலையைக் கணித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும்.
அதன் பின்னரே அரசாங்கம் முடிவெடுக்கும்.
கூட்டுத்தாபனம் சமர்ப்பிப்பது தான் இறக்குமதி செய்த விலை மற்றும் அதற்கான செலவு ஆகியவற்றை மட்டுமே தவிர, அந்தச் சூத்திரத்தில் வேறு எந்த விடயமும் இல்லை.
மாதத்திற்கு ஒருமுறை விலை சூத்திரத்தைக் கணிப்பது மாதத்தின் சராசரியைக் கொண்டு அல்ல, அந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பைக் கொண்டே கணிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

