அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்கிவருவது தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவேண்டுமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் கலாநிதி அலிரெஸா டெல்க்ஹோக் தெரிவித்துள்ளார்.
‘‘மத்திய கிழக்கில் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து இலங்கை மெளனம் காக்கக்கூடாது. இலங்கை ஒரு நடுநிலையான நாடு. நடு நிலைமை என்பது உலகில் முக்கிய போரின்போது அமைதிகாத்தல் என அமையக்கூடாது. அமொரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் பொதுமக்களையும் ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தாக்கி வருகிறது. இலங்கை மரபுரீதியாக ஒரு அணிசேரா நாடாகும். அத்துடன் மேற்குலக நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஈரானின் இலங்கை தேயிலை இறக்குமதிக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. நாங்கள் பத்து வருட யுத்தத்துக்கும் தயாராக உள்ளோம். ஈரானானது தன்னைத் தானே பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. யுத்தத்தை நிறுத்துவதற்கான நிபந்தனைகள் குறித்து தற்போதைய நிலையில் எதுவும் எடுத்துக்கூற முடியாது.
இந்த யுத்தத்தை நாங்கள் ஆரம்பிக்கவில்லை, நாங்கள் திடமான முறையில் எதற்கும் தயாராகவே உள்ளோம். நாங்கள் 47 வருட காலமாக எங்கள் எதிரியை இனங்கண்டு வருகிறோம். எமது அண்டை இஸ்லாமிய நாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரெஸா டெல்க்ஹோக் தெரிவித்துள்ளார்.


