ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்பலை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்து விட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மார்க்-48 என்ற சக்திவாய்ந்த டார்பிடோ குண்டு மூலம் நேற்று முன்தினம் தகர்த்தது. இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 32 வீரர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மாயமான 60க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
“ஈரான் கடல் பகுதியில் இருந்து 2,000 மைல்களுக்கு அப்பால் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய டேனா போர்க்கப்பல் மீது எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்காக அமெரிக்கா மிகுந்த வருத்தம் அடையும்” என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கருத்து தெரிவித்துள்ளார்.

