“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, நீர்கொழும்பு களப்புப் பகுதியை அபிவிருத்தி செய்யும் புதிய திட்டமொன்று நாளை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதிய படகு இறங்குதுறை மற்றும் படகு செலுத்தும் தளம் என்பன அமைக்கப்படவுள்ளன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த அபிவிருத்தித் திட்டமானது நீர்கொழும்பு களப்பினை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன தரத்திலான இறங்குதுறை அமைக்கப்படுவதன் மூலம், படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், களப்புப் பகுதியின் அழகினைப் பேணுவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

